ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 7 March 2020 11:53 PM GMT (Updated: 7 March 2020 11:53 PM GMT)

புதுவை ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

புதுச்சேரி,

புதுவை நகரின் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு வருகின்றன. சிலர் இடம் பிடிப்பதற்காக பெட்டிக்கடைகளை வைத்துள்ளனர். அந்த கடைகள் செயல் படாமல் நாள் கணக்கில் இருந்து வருகின்றன. அதுமட்டுமின்றி பயன்பாடற்ற வாகனங்களையும் சிலர் சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கடைகள் அகற்றம்

இதை தவிர்க்கும் விதமாக செயல்படாத கடைகள், பயனற்ற வாகனங்களை உடனடியாக அகற்ற கலெக்டர் அருண் உத்தரவிட்டார். இதன்படி புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஏழுமலை, இளநிலை பொறியாளர் தேவதாஸ், தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் முன்னிலையில் நேற்று ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

பொக்லைன், கிரேன் மூலம் மூடிக்கிடந்த கடைகள், பழைய வாகனங்களை லாரி, டிராக்டர்களில் ஏற்றி சென்றனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக செஞ்சி சாலை, ஆம்பூர் சாலை பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story