பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 8 March 2020 10:30 PM GMT (Updated: 8 March 2020 7:12 PM GMT)

பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசி மகபெருந்திருவிழா கடந்த 29-ந் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், புஷ்பகவிமானத்தில் சுவாமி- அம்பாள் புறப்பாடு நடந்தது. நேற்று முன்தினம் கைலாச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. முக்கிய திருவிழாவான சப்பரத்தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர்- ஆனந்தவல்லி உற்சவமூர்த்திகள் வண்ண மலர்களால் அலங்கரித்து தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை இந்துசமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர் மற்றும் தக்கார் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் மணி ஆகியோர் தொடங்கிவைத்தனர். தேர் எடத்தெரு, செக்கடித்தெரு, தெற்குத்தெரு, மேற்குவானொலித்திடல், கடைவீதிவழியாக இழுத்துவரப்பட்டு மீண்டும் கோவிலை அடைந்தது. வழிநெடுகிலும் தெருக்களில் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு தண்ணீர்தெளித்து வண்ண வண்ண கோலங்களை இட்டு, சுவாமி- அம்பாளுக்கு சீர்வரிசையும், தேர்மரியாதையும் செய்தனர். இதில் தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (திங்கட்கிழமை) கொடி இறக்கமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) ரிஷபவாகனத்தில் சுவாமி வீதிஉலாவும், 11-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. 12-ந் தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு அடைகிறது. 15-ந் தேதி திருத்தேர் எட்டாம் திருவிழா விமரிசையாக நடக்கிறது.

தோளஸ்வரர் கோவில் தேரோட்டம்

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள திருவாலந்துறையில் தோளஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டுதோறும் மாசி மகத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேரை ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இழுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தேர் கோவில் வளாகத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இவ்விழாவில் திருவாலந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 

Next Story