தஞ்சை பூக்கொல்லையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு


தஞ்சை பூக்கொல்லையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2020 10:15 PM GMT (Updated: 13 March 2020 5:53 PM GMT)

தஞ்சை பூக்கொல்லையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த ராமநாதபுரம் ஊராட்சியில் உள்ள பூக்கொல்லையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மாடுகளுக்கான காத்திருப்பு இடம், வாடிவாசலுக்கு வரும் வழி, ஓடுபாதை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடுப்பு வேலிகளை பலமாக பொருத்தி, பார்வையாளர்களுக்கு போதுமான இடவசதி ஏற்படுத்திட கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் போட்டியில் ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்க்கும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள், களத்தில் மாடுபிடி வீரர்களும், மாட்டின் உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஆகியவை குறித்து அலுவலர்களிடம் கலெக்டர் எடுத்துரைத்தார். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் பொருத்தவும் உத்தரவிட்டார்.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான மருத்துவகுழுக்கள் மற்றும் அவசர ஊர்தி, சுகாதாரத்துறை சார்பில் மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ குழுக்கள் மற்றும் அவசர ஊர்திகளை தயார் நிலையில் வைத்திடுமாறு தொடர்புடைய அதிகாரிகளை கலெக்டர் கோவிந்தராவ் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, அரசு அலுவலர்கள், விழாக்குழுவினர் உடன் இருந்தனர்.

Next Story