தஞ்சை அருகே விஷம் தின்று சிறுமி தற்கொலை காதலன் கைது


தஞ்சை அருகே விஷம் தின்று சிறுமி தற்கொலை காதலன் கைது
x
தினத்தந்தி 14 March 2020 10:30 PM GMT (Updated: 14 March 2020 7:22 PM GMT)

தஞ்சை அருகே விஷம் தின்று சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமியின் காதலனை போலீசார் கைது செய்தனர்.

சாலியமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள அப்பரசன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 22). இவர் வலங்கைமான் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார். அந்த சிறுமி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் வேலை பார்த்து வந்தபோது இவர்களிடையே காதல் மலர்ந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை திருப்பூரில் இருந்து வரவழைத்த பிரகாஷ், தஞ்சையை அடுத்த மலையர்நத்தம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் அங்கு தங்கி உள்ளனர்.

விஷம் தின்று தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது மன வேதனை அடைந்த அந்த சிறுமி, அந்த வீட்டில் வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த குருணை மருந்தை (விஷம்) தின்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அம்மாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Next Story