மணல் கடத்தல் கும்பல் தலைவனுடன் இன்ஸ்பெக்டர் பேரம் பேசும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவுவதால் பரபரப்பு


மணல் கடத்தல் கும்பல் தலைவனுடன் இன்ஸ்பெக்டர் பேரம் பேசும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவுவதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 March 2020 10:45 PM GMT (Updated: 14 March 2020 9:25 PM GMT)

மணல் கடத்தல் கும்பல் தலைவனுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேரம் பேசும் ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றவர் ராம்ஆண்டவர். இவர் வீரகனூர் அருகே உடும்பியம் பகுதியில் வசிக்கும் மணல் கடத்தல் கும்பல் தலைவன் ஒருவரிடம் பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீரகனூர் வழியே சுவேத நதி ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோரம் உள்ள கவர் பனை, லத்தவாடி, திட்டச்சேரி ஆகிய கிராமங்களில் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. இந்த மணல் கடத்தலில் கும்பல் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

குண்டர் சட்டம்

சமூக வலைத்தளங்களில் பரவும், இன்ஸ்பெக்டர் பேரம் பேசும் ஆடியோ சுமார் 1 மணி நேரம் ஓடுகிறது. இந்த ஆடியோவில் இன்ஸ்பெக்டர் ராம் ஆண்டவர் பேசும் போது, மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தை பயன்படுத்த எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். எனவே மணலை பத்திரப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என கூறுகிறார்.

இது தவிர அதிகாலை 4 மணிக்கு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வண்டியை நிறுத்திவிட்டு, தனது குடியிருப்புக்கு வந்து பணம் கொடுத்துவிட்டு செல்லும்படியும் தெரிவித்துள்ளார். எப்போது மணல் அள்ள வேண்டும். எங்கு கொண்டு செல்ல வேண்டும். எங்கு வந்து பணத்தை தர வேண்டும். அதற்கான சரியான நேரம் குறித்தும் மணல் கடத்தல் கும்பல் தலைவனிடம் இன்ஸ்பெக்டர் பேரம் பேசியுள்ளார்.

அரசு வாகனம் பறிமுதல்

இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அவர் துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து முதல் கட்டமாக இன்ஸ்பெக்டர் ராம் ஆண்டவர் பயன்படுத்திய அரசு வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து ராம் ஆண்டவர் மற்றும் மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story