கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் 3 பிரிவுகளில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மந்திரி சுதாகர் பேட்டி


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் 3 பிரிவுகளில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மந்திரி சுதாகர் பேட்டி
x
தினத்தந்தி 15 March 2020 12:31 AM GMT (Updated: 15 March 2020 12:31 AM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் 3 பிரிவுகளில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுவதாக மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் கொரோனா பாதிப்பு தொடர்பாக அதிக மக்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்று(அதாவது நேற்று) மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என 92 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 50 பேருக்கான அறிக்கை கிடைத்துள்ளது. அந்த 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருபவர்கள் தான் கொரோனா வைரசால் பாதிக்கப்படுகின்றனர்.

அதனால் விமான பயணிகளிடம் தான் பெரும்பாலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 132 பேரிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் மட்டும் 77 ஆயிரத்து 730 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. மங்களூரு விமான நிலையத்தில் 27 ஆயிரத்து 963 பேருக்கும், பிற விமான நிலையங்களில் 5 ஆயிரத்து 439 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 32 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் 6 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இதுவரை விமான நிலையங்களில் பயணிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது ஏ.பி.சி. என்ற அடிப்படையில் 3 பிரிவுகளில் பயணிகளிடம் சோதனை நடத்தப்படுகிறது. கொரோனா அறிகுறி இருப்பவர்கள் ஏ பிரிவில் சேர்க்கப்பட்டு, நேரடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரழிவு நோய் இருப்பின் பி பிரிவுகளுக்கு சேர்க்கப்பட்டு, அவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் சி பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இவ்வாறு 3 பிரிவுகளில் சோதனை நடத்துவதால் கொரோனா பாதித்தவர்கள், அறிகுறி இருப்பவர்கள், நோய் தாக்காதவர்களை அடையாளம் கண்டுகொள்வது எளிதாகிறது.

கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் சிகிச்சை பெற்று சி பிரிவுக்கு வருவதற்காக, அவர்களுக்கு தேவையான எல்லா விதமான மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா குறித்து மக்கள் அறிந்து கொள்ள 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம். அப்போது மக்களுக்கு முன்எச்சரிக்கையாக இருக்க வேண்டியது குறித்தும் தெரிவிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.

வெளிநாட்டில் இருந்து வந்த தம்பதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பற்றி கேட்கிறீர்கள். ஒரு தம்பதி வெளிநாட்டில் இருந்து வந்தது உண்மை தான். அவர்கள் பெங்களூருவுக்கு வந்துவிட்டு டெல்லிக்கு சென்றுவிட்டனர். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தம்பதி வெளியே வரவில்லை. விமான நிலையத்தின் உள்ளே இருந்தபடியே டெல்லிக்கு திரும்பி சென்றிருப்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உறுதியாகி இருக்கிறது. பெங்களூரு விமான நிலையத்தில் அந்த தம்பதி ஒரு மணிநேரம் மட்டுமே இருந்தனர்.

கலபுரகி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதியவர் உயிர் இழந்திருப்பதால், அந்த மாவட்டத்தில் வசிப்பவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முதியவரின் உறவினர் உள்பட 71 பேர் முழு கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், முழுமையாக கண்காணிக்கவும் கலபுரகி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.

Next Story