ஆறுமுகநேரியில் கார் மோதி உப்பள தொழிலாளி பலி மற்றொருவர் படுகாயம்


ஆறுமுகநேரியில் கார் மோதி உப்பள தொழிலாளி பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 15 March 2020 10:00 PM GMT (Updated: 15 March 2020 12:55 PM GMT)

ஆறுமுகநேரியில் கார் மோதி உப்பள தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரியில் கார் மோதி உப்பள தொழிலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

உப்பள தொழிலாளி 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கமலாநேரு காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் கணேசன் தனது சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். அவர் ஆறுமுகநேரி தபால்நிலையம் முன்பு சென்று கொண்டு இருந்தார். அவருக்கு முன்னால் ஆறுமுகநேரி காணியாளர் தெருவை சேர்ந்த செல்வராஜ் (63) என்பவர் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நெய்தலூரை சேர்ந்த ராஜ்குமார் (39) என்பவர் தனது உறவினர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் வந்தார். திடீரென அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள்களில் சென்ற செல்வராஜ், கணேசன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் செல்வராஜிக்கு 2 கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாவு 

இதனை அறிந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். செல்வராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த ராஜ்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான கணேசனுக்கு சக்தீஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

Next Story