திருச்செந்தூரில் அடுத்த மாதம் அகில இந்திய கபடி போட்டி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தகவல்


திருச்செந்தூரில் அடுத்த மாதம் அகில இந்திய கபடி போட்டி  அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 15 March 2020 10:30 PM GMT (Updated: 15 March 2020 1:54 PM GMT)

திருச்செந்தூரில் அடுத்த மாதம் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடக்க உள்ளதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் அடுத்த மாதம் அகில இந்திய அளவிலான கபடி போட்டி நடக்க உள்ளதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

கபடி போட்டி 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2–ந்தேதி முதல் 5–ந் தேதி வரை அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி நடக்க உள்ளது. இதற்காக திருச்செந்தூர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரில் உள்ள மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது;–

ரூ.11 லட்சம் 

திருச்செந்தூரில் நடக்கும் கபடி போட்டியில் 16 ஆண்கள் அணியும், 12 பெண்கள் அணியும் கலந்து கொள்கின்றன. இதில் ரெயில்வே அணிகள், ராணுவ அணிகளும் அடங்கும். ஆண் வீரர்களுக்கு சிறந்த ரைடர், கேச்சர், ஆல்ரவுண்டர் ஆகிய 3 பேருக்கு மோட்டார் சைக்கிள்களும், வீராங்கனைகள் 3 பேருக்கு மொபட்களும் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ஆண், பெண் இரு அணிகளுக்கும் தங்க கோப்பையுடன் தலா ரூ.11 லட்சம் ரொக்க பரிசும், 2–வது பரிசாக ரூ.5 லட்சமும் வெள்ளி கோப்பையும், 3–வது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்பட உள்ளது. ஆண்கள் அணிக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் வழங்குகிறார். பெண் அணிகளுக்கு கனிமொழி எம்.பி. பரிசுகள் வழங்குகிறார். இந்த போட்டிகளை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.

மரியாதை 

கபடியே தனது உயிராக நினைத்து வளர்த்து பல்வேறு வீரர்களை உருவாக்கிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம் அன்று சிறப்பாக அலங்கரிக்கப்படும். மேலும் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள வரும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு கபடி வீரர்களுடன் சேர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில மாணவர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரோட்டரிகோ, மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம்ரிவீஸ், கபடி கந்தன், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா, வீரபாண்டியபட்டினம் பஞ்சாயத்து கவுன்சிலர் கே.டி.சி.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story