பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் 5 கருட சேவை


பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா:  திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் 5 கருட சேவை
x
தினத்தந்தி 15 March 2020 10:15 PM GMT (Updated: 15 March 2020 2:32 PM GMT)

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 5 கருட சேவை நடைபெற்றது.

ஏர்வாடி, 

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 5 கருட சேவை நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழா 

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10–ந் தேதி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் காலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள் திருத்தேர் முன்பு கால் நாட்டப்பட்டது.

5 கருடசேவை 

இதையடுத்து 5 நம்பி சுவாமிகள் கருடசேவை நடந்தது. கருட வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு மேலரதவீதியில் மகேந்திரகிரி மலையை நோக்கி தேவமகரிஷிகளுக்கு 5 நம்பி சுவாமிகளும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19–ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் நடக்கிறது. தேரோட்டத்தை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். 20–ந் தேதி மாலை 5 மணிக்கு நம்பியாற்றில் தீர்த்தவாரி, இரவில் வைஷ்ணவர்களுக்கு விடை சாதித்தல் நடைபெறுகிறது.

Next Story