பெரியகுரும்பப்பட்டி, இச்சடியில் ஜல்லிக்கட்டு: 1,775 காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள் 50 பேர் காயம்


பெரியகுரும்பப்பட்டி, இச்சடியில் ஜல்லிக்கட்டு: 1,775 காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய மாடுபிடி வீரர்கள் 50 பேர் காயம்
x
தினத்தந்தி 15 March 2020 11:30 PM GMT (Updated: 15 March 2020 4:44 PM GMT)

பெரியகுரும்பப்பட்டி, இச்சடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1,775 காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் 50 பேர் காயம் அடைந்தனர்.

அன்னவாசல், 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பெரியகுரும்பப்பட்டியில் காயம்பு அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.இதில் 180 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி, பந்தாடியது. இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 1,000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

18 பேர் காயம்

காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 பேர் மேல்சிகிச்சைக்காக இலுப்பூர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் காளைகளை அடக் கிய வீரர்களுக்கும், வீரர் களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், நாற்காலிகள், மின்விசிறி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், தாசில்தார் முருகேசன் மற்றும் அன்னவாசல், பெரியகுரும்பப்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பெரியகுரும்பப்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர். இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆதனக்கோட்டை

ஆதனக்கோட்டை அடுத்துள்ள இச்சடி முனீஸ்வரர் கோவில் திருவிழாவினை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து கந்தர்வகோட்டை, வாராப்பூர், பெருங்களூர், இச்சடி, மழையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 775 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 230 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்து மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயம், மின்விசிறி, கட்டில், நாற்காலி போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் இச்சடி பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story