திரிசூலத்தில் விற்க முயன்ற கிருஷ்ணர் சிலை மீட்பு 2 பேர் கைது


திரிசூலத்தில் விற்க முயன்ற கிருஷ்ணர் சிலை மீட்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 March 2020 11:30 PM GMT (Updated: 15 March 2020 7:49 PM GMT)

திரிசூலத்தில் விற்பனைக்காக மறைத்து வைத்து இருந்த கிருஷ்ணர் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியில் பஞ்சலோக சிலைகள் விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உத்தரவின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, கூடுதல் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா தலைமையில் துணை சூப்பிரண்டு சுந்தரம் மற்றும் போலீசார் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் திரிசூலத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திரிசூலம் ரெயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், திரிசூலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோட்டைச்சாமி(வயது 47), ஜமீன் பல்லாவரம் கச்சேரி மலையைச்சேர்ந்த சுரேஷ்(43) என்பது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் 2 பேரிடம் இருந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் உலோக கிருஷ்ணர் சிலை இருந்தது. நின்ற நிலையில் சுமார் 1 அடி உயரமுள்ள பீடத்துடன் கூடிய அந்த கிருஷ்ணர் சிலையின் வலது முழங்கை அறுக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டைச்சாமி, சுரேஷ் இருவரையும் கைது செய்தனர்.

அந்த உலோக கிருஷ்ணர் சிலையை 2 பேரும் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டதா?. சிலையில் உள்ள கை எங்கு, எதற்காக வெட்டப்பட்டது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story