குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்


குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 March 2020 9:45 PM GMT (Updated: 15 March 2020 7:49 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர், 

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை மாநில செயற்குழு கூட்டம், திருப்பூர் நடராஜ் தியேட்டர் எதிர்புறம் உள்ள தெற்கு ரோட்டரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிரு‌‌ஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட மனித உரிமைத்துறை தலைவர் ரபி அஹமத், துணைத்தலைவர் யாசர் ஆகியோர் வரவேற்று பேசினர்.

வடக்கு மாவட்ட தலைவர் கோபி, தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பை சேர்ந்த அப்துல் மஜித், மனித உரிமைத்துறை இணைச்செயலாளர் செல்வராணி, பொதுச்செயலாளர் சேவியர் உள்பட பலர் கலந்துகொண்டு கூட்டத்தில் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நாட்டின் பொருளாதார நிலையினை உயர்த்த வருவாய் ஈட்டி வரும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும். வருகிற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கோட்டையாக இருக்கும் தொகுதிகளை கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கி தர வேண்டும்.

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய அனைத்து தேர்வுகளிலும் ஊழல் புரிந்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முறையாக தேர்வு நடத்த முடியாத தமிழக அரசு உடனே ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story