திருச்சியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு


திருச்சியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 15 March 2020 10:15 PM GMT (Updated: 15 March 2020 8:12 PM GMT)

திருச்சியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார். பிறந்தநாள் கொண்டாடிவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.

திருச்சி,

திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள குலவைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் கிஷோர்(வயது 18). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். இவரது நண்பர், திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள உடையான்பட்டி வசந்தம்நகரை சேர்ந்த விக்னேஷ்வர்(18). இவர் பி.பார்ம் பட்டயப்படிப்பு படித்து வந்தார். இருவரும் விளையாட்டு வீரர்கள்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருச்சி மாநகருக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர், இரவில் வீடு திரும்பினர். மோட்டார் சைக்கிளை கிஷோர் ஓட்ட, விக்னேஷ்வர் பின்னால் அமர்ந்திருந்தார். திருச்சி தலைமை தபால் அலுவலகம் ரோட்டில் டி.வி.எஸ்.டோல்கேட் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து வேகமாக வந்த கார், முதலியார் சத்திரம் குட்ஷெட் செல்லும் வழியில் திடீரென திரும்பியது. அப்போது மோட்டார் சைக்கிள் காரின் முன்பக்க பக்கவாட்டு கதவில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கிஷோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

சாவு

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய விக்னேஷ்வரை சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் காரை ஓட்டி வந்த திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதிநகரை சேர்ந்த காதர்பாஷா(43), அவருடன் வந்த குடும்பத்தினரும் காயம் அடைந்தனர். இது பற்றி திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ்வர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பிறந்தநாள் கொண்டாடினார்

விபத்தில் பலியான விக்னேஷ்வர் பற்றிய உருக்கமான தகவல் கிடைத்தது. அதாவது, நேற்று முன்தினம் விக்னேஷ்வருக்கு பிறந்தநாள் ஆகும். அதற்காக, தனது நண்பர் கிஷோர் மற்றும் சில நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது. கொண்டாட்டம் முடிந்து இரவு வேளையில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த காதர்பாட்ஷாவிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story