தனித்தனி சம்பவம்: தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை


தனித்தனி சம்பவம்: தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 15 March 2020 9:45 PM GMT (Updated: 15 March 2020 10:15 PM GMT)

விழுப்புரம் அருகே தனித்தனி சம்பவத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள புரு‌ஷானூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 32), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடுகளுக்கு தழை பறிப்பதற்காக அதே கிராமத்தில் உள்ள மரத்தின் மீது ஏறியபோது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு முதுகில் அடிபட்டது. அதிலிருந்து வலியால் அவதிப்பட்டு வந்த குமார், சம்பவத்தன்று வலி தாங்க முடியாமல் வி‌‌ஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே உள்ள காணை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (85). சம்பவத்தன்று இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌‌ஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story