போடியில் பரபரப்பு: மனைவியை கொன்று நாடகமாடிய ராணுவ வீரர் கைது உறவினர் உள்பட 5 பேரும் சிக்கினர்


போடியில் பரபரப்பு: மனைவியை கொன்று நாடகமாடிய ராணுவ வீரர் கைது  உறவினர் உள்பட 5 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 15 March 2020 11:30 PM GMT (Updated: 15 March 2020 10:15 PM GMT)

போடியில் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து நாடகமாடிய ராணுவ வீரர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போடி,

தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகர் அருகே உள்ள ஜெயம்நகரை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 33). ராணுவ வீரரான இவர், மராட்டிய மாநிலம் புனேயில் பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி சுப்புலட்சுமி (23). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். போடியில் மாமனார், மாமியாருடன் சுப்புலட்சுமி வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுப்பில் ஊருக்கு வந்த முனீஸ்வரனுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி இரவு சுப்புலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய தந்தை சக்திவேலுக்கு முனீஸ்வரனின் பெற்றோர் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்புலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையே சுப்புலட்சுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை சக்திவேல் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரன் புனேக்கு தனது மனைவியை அழைத்து சென்றார். அங்கு முனீஸ்வரனுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது சுப்புலட்சுமிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், கணவரிடம் கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே புனேயில் இருந்து சுப்புலட்சுமியை, தனது சொந்த ஊருக்கு முனீஸ்வரன் அழைத்து வந்து விட்டார். பின்னர் புனேக்கு சென்ற முனீஸ்வரன் அங்கு பணியில் ஈடுபட்டார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுப்பில் முனீஸ்வரன் ஊருக்கு வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன் தாக்கியதில், சுப்புலட்சுமி இறந்ததாக தெரிகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை போல நாடகமாட திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து சுப்புலட்சுமியின் உடலை முனீஸ்வரனும், அவருடைய தந்தை ராஜூ (64), தாய் செல்வி (52), முனீஸ்வரனின் தம்பி சதீஸ் குமார் (30), உறவினர்கள் லட்சுமி, பாலமுனீஸ் (25) ஆகியோர் சேர்ந்து தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி பதிவு செய்து, முனீஸ்வரன், அவருடைய தந்தை ராஜூ, தாய் செல்வி உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story