மும்பை - அலிபாக் இடையே பயணிகள் கப்பல் சேவை மத்திய இணை மந்திரி தொடங்கி வைத்தார்


மும்பை - அலிபாக் இடையே பயணிகள் கப்பல் சேவை மத்திய இணை மந்திரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 March 2020 10:47 PM GMT (Updated: 15 March 2020 10:47 PM GMT)

மும்பை-அலிபாக் இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய இணை மந்திரி மன்சுக் மாண்டாவியா தொடங்கி வைத்தார்.

மும்பை,

மும்பை கேட்வே ஆப் இந்தியா மற்றும் பாவுச்சா தக்கா பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் உள்ள மாந்த்வா பகுதிக்கு சென்று வருகின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் படகுகள் மூலம் மும்பை- மாந்த்வா இடையே சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் மும்பை-அலிபாக் இடையே பயணிகள் மற்றும் வாகனங்கள் கொண்டு செல்லும் வகையிலான கப்பல் போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது. கப்பல் சேவையை மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி மன்சுக் மாண்டாவியா தொடங்கி வைத்தார்.

மும்பை பாவுச்சா தக்கா- அலிபாக்கில் உள்ள மாந்த்வா இடையே இந்த கப்பல் இயக்கப்படும். இதற்காக பாவுச்சா தக்காவில் ரூ.31 கோடி செலவிலும், மாந்த்வாவில் ரூ.135 கோடியிலும் கப்பல் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை- அலிபாக் இடையே இயக்கப்படும் ‘ரோபக்ஸ்' ரக கப்பல் கிரீஸ் நாட்டில் கட்டப்பட்டதாகும். இதில் 1,000 பயணிகளுடன் 200 காா்களையும் கொண்டு செல்ல முடியும். மேலும் இந்த கப்பலை மழைக்காலத்தில் கூட இயக்க முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை துறைமுக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரோபக்ஸ் கப்பல் 45 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் 18 கி.மீ. தூரம் சென்றுவிடும். சாலை மார்க்கமாக மும்பையில் இருந்து மாந்த்வா செல்ல 3 அல்லது 4 மணி நேரங்கள் ஆகும்’’ என்றார்.

இந்தநிலையில் மும்பை- அலிபாக் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் எனவும், நெருல் மற்றும் பேலாப்பூர், பயந்தர் மற்றும் டோம்பிவிலி இடையே அடுத்த 2 ஆண்டுகளில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனவும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கேட்வே ஆப் இந்தியா- மாந்த்வா இடையே ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் பேர் படகு மற்றும் கட்டுமரங்களில் பயணம் செய்வதாக மும்பை துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story