வெளிமாநிலத்தில் இருந்து காரைக்கால் வந்த பயணிகளிடம் நவீன கருவி மூலம் பரிசோதனை


வெளிமாநிலத்தில் இருந்து காரைக்கால் வந்த பயணிகளிடம் நவீன கருவி மூலம் பரிசோதனை
x

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலத்தில் இருந்து காரைக்கால் வந்த பயணிகளிடம் நவீன கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது.

காரைக்கால்,

உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு முறைகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட நலத்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வெளிமாநிலங்களில் இருந்து காரைக்காலுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நவீன கருவி (அகசிவப்பு வெப்பமானி) கொண்டு பரிசோதனை செய்யும் படி மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் ஆகியோர் உத்தரவிட்டனர்.

பஸ், ரெயில் நிலையங்கள்

இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை ஊழியர்கள் நேற்று காரைக்கால் புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையத்தில் நவீன கருவி(அகசிவப்பு வெப்பமானி) கொண்டு வெளி மாநில பயணிகளிடம் பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவர்கள் பயணிகளிடம், ‘யாருக்காவது சளி, இருமல், மூச்சுதிணறல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உள்ள நாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகள் 28 நாட்கள் வெளியில் யாரையும் தொடர்பு கொள்ளாமல் வீட்டில் இருக்க வேண்டும். சளி, இருமல் இருந்தால் ஒருமுறை பயன்படுத்தும் பேப்பரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்’. என்றனர்.

Next Story