கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி 7 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைப்பு எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என மந்திரி அறிவிப்பு


கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி 7 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைப்பு எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 12:11 AM GMT (Updated: 16 March 2020 12:11 AM GMT)

கொேரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி நடைபெற இருந்த 7 முதல் 9-ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை அறிவித்தபடி நடைபெறும் என்று மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

சீனா உள்ளிட்ட உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 2 பேர் உயிர் இழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் கர்நாடக மாநிலம் கலபுரகியை சேர்ந்த 76 வயது முதியவர் ஆவார். மேலும் 107 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

பெங்களூரு மற்றும் மங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பெங்களூரு உள்பட கா்நாடக மாநிலம் முழுவதும் வணிகவளாகங்கள், தியேட்டர்கள் திறக்கவும், பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் ஒரு வாரத்திற்கு தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் நேற்று முன்தினத்தில் இருந்து வணிகவளாகங்கள், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. நேற்று 2-வது நாளாகவும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. வணிகவளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன.

அதே நேரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 6-ம் வகுப்பு வரை தேர்வுகள் நடைபெறாது என்று மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் 7 முதல் 9-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு மார்ச் 16-ந் தேதி (இன்று) தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பீதி காரணமாக 7 முதல் 9-ம் வகுப்பு வரை நடைபெற இருந்த தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளி, கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

கர்நாடகத்தில் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது மாநிலம் முழுவதும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு நாளை (அதாவது இன்று) முதல் தொடங்கி நடைபெற இருந்த தேர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர்வுகள் வருகிற 31-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. 31-ந் தேதிக்கு பின்பு 7, 8, 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிவிக்கப்படும். அதுவரை விடுமுறை இருப்பதால், இதனை தேர்வுக்கு படிக்க விடப்பட்டுள்ள விடுமுறையாக கருதி மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மார்ச் 31-ந் தேதிக்கு பின்பு கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்துவதற்கான தேதி குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படும். மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

அதே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏற்கனவே அறிவித்தபடி 27-ந் தேதி தொடங்கி நடைபெறும். பி.யூ.சி. 2-வது ஆண்டுக்கான தேர்வுகள் வழக்கம் போல நடந்து வருகிறது. இவ்வாறு மந்திரி சுரேஷ் குமார் கூறினார்.

இதற்கிடையே, கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கு 7, 8, 9-ம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டு இருப்பது குறித்து கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும், அதனால் தனியார் பள்ளிகளிலும் 7, 8, 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துைற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள 7 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ஏப்ரல் மாதம் முதல் வாரம் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story