உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்; காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்; காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 March 2020 10:00 PM GMT (Updated: 16 March 2020 2:47 PM GMT)

மதுரையில் 24–ந் தேதி நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு மதுரையில் வருகிற 21–ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. இதுதொடர்பாக குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் கலந்துகொண்டு பேசும் போது கூறியதாவது:–

நாடு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் அரசியலில் மரியாதை, ஒற்றுமை இருந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. காங்கிரஸ் கட்சியை அழிக்க பிரதமர் நரேந்திரமோடி நினைக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது.

பல மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை மிரட்டி பணம் கொடுத்து விலைக்கு வாங்கி வருகிறார்கள். இந்த செயலை தடுக்க வேண்டும் என்றால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் யாரையும் பிரிக்க முடியாது. மதுரையில் நடைபெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் குமரி மாவட்டத்தில் இருந்து திரளானவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ராபர்ட் புரூஸ், மாநகர தலைவர் அலெக்ஸ், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆஸ்கர்பிரடி, பினுலால்சிங், சாமுவேல் ஜார்ஜ், ஜெயசந்திரன், அந்தோணி முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் குமரி மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story