கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி குட்கா, எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்


கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி குட்கா, எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 March 2020 10:15 PM GMT (Updated: 16 March 2020 4:13 PM GMT)

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா, எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவலம், 

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சித்தூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வேனில் கடத்தி வரப்படுவதாக காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவலம் இ.பி. கூட்ரோடு பகுதியில் வேகமாக வந்த 2 வேன்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.

ஆனால் வேன்களை நிறுத்தாமல் டிரைவர்கள் வேகமாக ஓட்டி சென்று விட்டனர். இதையடுத்து போலீசார் அந்த வேன்களை துரத்தி சென்றபோது திருவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வேன்களை நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் போலீசார் 2 வேன்களையும் பறிமுதல் செய்து திருவலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து சோதனை நடத்தினர். அப்போது ஒரு வேனில் 25-க்கும் மேற்பட்ட கொசு தடுப்பு ஊதுவத்தி பெட்டிகள் இருப்பது தெரிய வந்தது. மற்றொரு வேனை போலீசார் சோதனை செய்தபோது மிக்சி, ஏர்கூலர், மின்விசிறிகள் அடங்கிய 30-க்கும் அதிகமான பெட்டிகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வேன்களில் இருந்து பெட்டிகளை அப்புறப்படுத்தி பார்த்தபோது பெட்டிகளுக்கு கீழ் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையும் மேலும் வேன்களில் இருந்த சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள கொசு தடுப்பு ஊதுவத்திகள், மிக்சி, ஏர்கூலர், மின்விசிறிகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story