கொரோனா வைரஸ் பீதி: மீன் உணவுக்கு மாறிய திசையன்விளை பகுதி மக்கள் கோழி, முட்டை விற்பனை மந்தம்


கொரோனா வைரஸ் பீதி: மீன் உணவுக்கு மாறிய திசையன்விளை பகுதி மக்கள் கோழி, முட்டை விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 16 March 2020 10:10 PM GMT (Updated: 16 March 2020 10:10 PM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் திசையன்விளை பகுதி மக்கள் மீன் உணவுக்கு மாறியுள்ளனர். நேற்று கறிக்கோழி, முட்டை விற்பனை மந்தமாக காணப்பட்டது.

திசையன்விளை,

கொரோனா வைரஸ் பீதி மக்களை தொற்றிக் கொண்டுள்ளது. வெளியிடங்களுக்கு செல்வதை, குறிப்பாக பஸ்நிலையம், ரெயில்வே நிலையம், மார்க்கெட், வணிக வளாகம் போன்ற இடங்களுக்கு செல்வதை மார்ச்.31-ந் தேதி வரை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நேற்று பஸ்நிலையங்கள், ரெயில் நிலையம், மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பஸ்கள், ரெயில்களில் பயணிப்போர் எண்ணிக்கையும் மிக குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் கோழி, முட்டை போன்றவற்றை தவிர்த்து வருகின்றனர்.

அசைவ பிரியர்களில் பெரும்பாலானோர் மீன் உணவுக்கு மாறியுள்ளனர். இதனால் நேற்று திசையன்விளையில் உள்ள மாவட்டத்தின் பெரிய மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் குவிந்து காணப்பட்டனர்.

இந்த மார்க்கெட்டில் நேற்று சாளை, பன்னா, துப்பு வாளை, சீலா, மாவுளா, குதிப்பு, நவரை, பாறை, குருவலை, வாவல், இறால், வலைமீன் உள்பட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதிகாலை முதலே மக்கள் அதிக அளவில் குவிந்திருந்து கடைகளில் வேண்டிய மீன்களை வாங்கி சென்றனர்.

சாளை ரக மீன்கள் ரூ.10-க்கு 4 முதல் 6 மீன்களும், வலை மீன்கள் சிறிய ரகம் கிலோ ரூ.200-க்கும், பெரிய ரகம் கிலோ ரூ.400-க்கும், மாவுளா மீன் சிறிய ரகம் கிலோ ரூ.400-க்கும், பெரிய ரகம் ரூ.600-க்கும், சீலா ரக மீன்கள் சிறிய ரகம் கிலோ ரூ.400-க்கும், பெரிய ரகம் கிலோ ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மற்ற ரக மீன்கள் நேற்றுகூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.

அதேசமயம் நேற்று கோழிக்கறிக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் சிலர் மட்டுமே கோழிக்கறி வாங்கிச்சென்றனர். கோழிக்கறி கிலோ ரூ.65-க்கும், பிராய்லர் முட்டை ஒன்று ரூ.2.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை வெகுவாக குறைந்த நிலையிலும் கோழிக்கறி, முட்டை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் கோழிக்கறி, முட்டை விற்பனை மந்தமாக இருந்ததாக பிராய்லர் கோழிக்கறிக்கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story