நெல்லையில் திருநங்கைகளுக்கு தையல் பயிற்சி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


நெல்லையில் திருநங்கைகளுக்கு தையல் பயிற்சி  கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 March 2020 10:30 PM GMT (Updated: 17 March 2020 11:57 AM GMT)

நெலலையில் திருநங்கைகளுக்கு தையல் பயிற்சி வகுப்பை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

நெலலையில் திருநங்கைகளுக்கு தையல் பயிற்சி வகுப்பை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

தையல் பயிற்சி 

நெல்லை அருகே உள்ள நரசிங்கநல்லூரில் 25 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

நெல்லை மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் நகர்புறத்தை ஒட்டியுள்ள 14 கிராம ஊராட்சிகளில் தேசிய ரூர்பன் என்ற இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் ஏழை எளியவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்றவர்கள் பேக்கரி, ஆயத்த ஆடை உள்ளிட்ட தொழில் செய்து வருமானத்தை பெருக்கி வருகிறார்கள்.

ஆயத்த ஆடை தொழில் நிறுவனம் 

இந்த திட்டம் மூலம் திருநங்கைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியை நிறைவு செய்யும் போது, நரசிங்கநல்லூரில் தனியாக கட்டிடம் அமைத்து தையல் தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்படும். ஒரு ஆயத்த ஆடை தொழில் நிறுவனம் போன்று செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சரவணன் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ வரவேற்று பேசினார். இதில் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமி‌ஷனர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story