கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் தியேட்டர், பஸ் உரிமையாளர்கள் பங்கேற்பு


கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் தியேட்டர், பஸ் உரிமையாளர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 March 2020 10:30 PM GMT (Updated: 17 March 2020 3:20 PM GMT)

கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், தியேட்டர், திருமண மண்டபம், பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில், தியேட்டர், திருமண மண்டபம், பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு கூட்டம் 

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில், தியேட்டர், திருமண மண்டபம், பஸ் உரிமையாளர்கள், ஓட்டல், தங்கும் விடுதி, பல்பொருள் அங்காடி, ஜவுளிக்கடை உரிமையாளர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நகராட்சி ஆணையாளர் ராஜாரம் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி நகர்நல மைய மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் உமாசெல்வி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உதவி மருத்துவர் ஆனந்த் ஆகியோர், கொரோனா வைரசால் பாதிக்கப்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள், அடுத்த 30 நாட்கள் பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடக்கூடாது. 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இருமல், தும்மலின்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். தொடர்ந்து சோப்பு போட்டு கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளக்கம் 

கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் செயின்ட் ஆன்ட்ரூஸ் பள்ளியில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி மேலாளர் கிறிஸ்டி ஆன்ட்ரூஸ் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணராம், சரவணகுமார் ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து காணொலி காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி பீச் ரோட்டில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்சுரல் டிரஸ்ட், சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி, பெஸ்ட் ஸ்போர்ட்ஸ் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் நிகழ்ச்சியை நடத்தின. சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். அலைன்ஸ் கிளப் ஆப் இன்டர்நேசனல் செயலாளர் முருகேஷ் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரோச் பூங்காவில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஸ்கேட்டிங் நகர விலக்கு வரை நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாணவ–மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஜோசப்ராஜ் நன்றி கூறினார்.

Next Story