கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சேலம் மாவட்டத்தில் பூங்கா, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன


கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சேலம் மாவட்டத்தில் பூங்கா, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 18 March 2020 12:00 AM GMT (Updated: 17 March 2020 6:57 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் பூங்கா, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வெறிச்சோடியது.

சேலம்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு அரங்குகள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் நேற்று காலை முதல் மூடப்பட்டன. இதுதொடர்பான அறிவிப்பு தியேட்டர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதனால் பொழுது போக்கிற்காக சினிமா பார்ப்பவர்கள் வீட்டில் முடங்கினர். சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் தற்காலிகமாக வேலை இழந்துள்ளனர்.

பூங்காக்கள் மூடல்

சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் அங்குள்ள இயற்கை அழகை ரசிப்பதுடன், பூங்காக்களுக்கு சென்றும், படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்காடு அண்ணா பூங்கா, மான் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, படகு இல்லம் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்காட்டில் பல இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதன் காரணமாக தற்காலிகமாக கடைகள் வைத்து பிழைப்பு நடத்தும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வராததால் அங்குள்ள விடுதிகளும் மூடப்பட்டன.

விளையாட்டு மைதானம்

இதேபோல், மேட்டூர் அணை பூங்கா, சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா மற்றும் மாநகரில் உள்ள 19 சிறிய பூங்காக்கள், அம்மா சுற்றுச்சூழல் அரங்கு உள்ளிட்டவைகளும் அரசு உத்தரவுப்படி மூடப்பட்டன. வருகிற 31-ந் தேதி வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து பூங்காக்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானமும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பூட்டப்பட்டன. இது தெரியாமல் நேற்று அதிகாலை நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி பெறுவதற்காக ஏராளமானவர்கள் அங்கு வந்தனர். பின்னர் மைதானம் பூட்டி கிடந்ததால் அவர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டோரம் மற்றும் அங்குள்ள பாலத்தின் கீழ் பகுதியில் நிறுத்திவிட்டு சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டதை பார்க்க முடிந்தது.

பக்தர்களின் வருகை குறைந்தது

சேலத்தில் உள்ள கோவில்களிலும் கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதேபோல் மேலும் பல கோவில்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 215 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அரசு உத்தரவுப்படி இதையொட்டி உள்ள 85 பார்கள் மூடப்பட்டன. மேலும் மாவட்டத்தில் கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களும் மூடப்பட்டன. இதை டாஸ்மாக் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சேலத்தில் சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதாலும், பொதுமக்கள் வெளியே செல்ல அச்சமடைந்ததாலும் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story