பொத்தேரியில் கடப்பாரையால் கடையின் பூட்டை உடைத்து வாலிபர் திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது


பொத்தேரியில்   கடப்பாரையால் கடையின் பூட்டை உடைத்து வாலிபர் திருடும் காட்சி   சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது
x
தினத்தந்தி 17 March 2020 10:09 PM GMT (Updated: 17 March 2020 10:09 PM GMT)

பொத்தேரியில் கடப்பாரையால் கடையின் பூட்டை உடைத்து வாலிபர் திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது.

வண்டலூர், 

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் வீடியோவில் கடந்த 15-ந் தேதி நள்ளிரவு 2.38 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள பேப்பர் கப் விற்கும் கடைக்கு வருகின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ஹெல்மெட் அணிந்து இருந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் குல்லா அணிந்து கொண்டு அந்த கடையின் முன்பு கடப்பாரையுடன் கீழே இறங்கினார். உடனே மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார். கடப்பாரையுடன் இறங்கிய வாலிபர் கடையின் இரும்பு ஷட்டர் பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று உள்பக்கமாக ஷட்டரை சாத்திகொண்டார். பின்னர் டார்ச்லைட்டை தனது வாயில் கவ்வியப்படி கடையில் கல்லா பெட்டியில் இருந்த 3 அறைகளையும் நிதானமாக ஒவ்வொரு அறையாக சாவகாசமாக திறந்து அதில் இருந்த தேவையில்லாத பொருட்களை எடுத்து வெளியே போட்டு அதில் இருந்த பணத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறார்.

சமூக வலைத்தளங்களில்

பின்னர் அதே கடையில் உள்ள ஒரு பையில் திருடிய பணத்தை போட்டுக்கொண்டு கடையிலிருந்து வெளியே வந்து மீண்டும் இரும்பு ஷட்டரை சாத்திவிட்டு திருடிய பொருட்களை கடை வாசலில் வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் கடை வாசலில் சில நிமிடங்கள் அமர்ந்து கொண்டிருந்தார். சில நிமிடங்களில் ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் இவரை இறக்கி விட்டுச் சென்ற வாலிபர் மீண்டும் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் கடைக்கு வருகிறான். இவர் கொள்ளையடித்த பணத்தை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் தருகிறார். அதனை அவர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ஒரு பையில் போட்டுக்கொள்கிறார்.

பின்னர் கடப்பாரையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஓரே மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பிச்செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. கடையின் பூட்டை உடைத்து திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் இது சம்பந்தமாக மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story