கொரோனா வைரஸ் பீதியால் பல்லடம் பகுதியில் கறிக்கோழி விற்பனை முடங்கியது: தினமும் ரூ.10 கோடி இழப்பு


கொரோனா வைரஸ் பீதியால் பல்லடம் பகுதியில் கறிக்கோழி விற்பனை முடங்கியது: தினமும் ரூ.10 கோடி இழப்பு
x
தினத்தந்தி 17 March 2020 10:15 PM GMT (Updated: 17 March 2020 10:15 PM GMT)

பல்லடம் பகுதியில் கொரோனா வைரஸ் பீதியால் கறிக்கோழி விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டு விற்பனை முடங்கியது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு தினமும் ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

பண்ணை தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சோளம், ராகி பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலாளர்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும், பல லட்சம் பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு, கேரளத்தில் பறவைக் காய்ச்சல் போன்ற காரணங்களால் கறிக்கோழி விற்பனை குறைந்தது. இதனால் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.27 ஆக உள்ளது. ஒரு கிலோ கறிக்கோழி வளர்க்க ரூ.78 வரை செலவாகும் நிலையில் இந்த கடும் விலைவீழ்ச்சியால் கறிக்கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள பண்ணையாளர்கள் வரலாறு காணாத அளவுக்குப் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள கறிக்கோழிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில் சுமார் 5 கோடி பேர் கோழி இறைச்சியை விரும்பி சாப்பிட்டு வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி விற்பனை மொத்தமாக பாதிப்படைந்துள்ளது.

இதுகுறித்து பல்லடம் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு (பி.சி.சி.) செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாயம் சார்ந்த தொழிலாக கோழிப்பண்ணை தொழில் விளங்குகிறது. தினமும் 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கோழிக்கு 45 நாட்களுக்கு ரூ.70 வரை தீவன செலவு ஆகிறது. தற்போது கொரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி விற்பனை வெகுவாக குறைந்து கோழிப்பண்ணைத் தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் சுமார் ரூ.20 கோடி மதிப்புள்ள கறிக்கோழிகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் சுமார் 5 கோடி பேர் கோழி இறைச்சியை விரும்பி சாப்பிட்டு வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி விற்பனை மொத்தமாக பாதிப்படைந்துள்ளது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு தினமும் ரூ. 10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோழிப் பண்ணையாளர்களையும் கோழிப்பண்ணை உற்பத்தி தொழிலையும் மத்திய, மாநில அரசுகள்தான் பாதுகாக்க வேண்டும். வங்கியில் கோழிப் பண்ணையாளர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும். பெரும் நஷ்டமடைந்த கோழிப் பண்ணையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

நடப்பு ஆண்டு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள அரசு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பருப்பு, உடைந்த கோதுமை, பழுப்பு நிற அரிசி உள்ளிட்ட தானியங்களை சலுகை விலையில் கோழிப் பண்ணைகளுக்கு வழங்கி கறிக்கோழி வளர்ப்புத் தொழிலை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story