மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து: கல்லூரி பஸ் மோதியதில் மாணவர் பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து: கல்லூரி பஸ் மோதியதில் மாணவர் பலி
x
தினத்தந்தி 17 March 2020 11:43 PM GMT (Updated: 17 March 2020 11:43 PM GMT)

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர் மீது கல்லூரி பஸ் மோதியது. இந்த விபத்தில் அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் அருள் செல்வம். இவரது மகன் சுதர்சனம்.(வயது21) அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3 வது ஆண்டுபடித்து வந்தார்.மேலும் வில்லியனூரில் உள்ள ஒரு காய்கறி கடையில் பகுதி நேர ஊழியராகவும் வேலை செய்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலையில் காய்கறி கடையில் வேலை பார்த்து விட்டு கல்லூரிக்கு செல்ல கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.வில்லியனூர் ஆச்சார்யா புரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, தன்னுடன் படித்து வரும் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு தான் படிக்கும் கல்லூரி பஸ் செல்வதை கண்டார்.

அவர்களை பார்த்ததும் உற்சாகம் அடைந்த சுதர்சனம் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து கை காட்டியபடி சென்று கொண்டிருந்தார். அவ்வப்போது பஸ்சை முந்திசெல்லவும் முயன்றார்.

விபத்தில் பலி

அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது கல்லூரி பஸ் உரசியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்த சுதர்சனம் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சுதர்சனம் துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டதால் அதிர்ச்சி அடைந்த சுதர்சனத்துடன் படிக்கும் மாணவர்கள் கதறி அழுதனர். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புபணியில் ஈடுபட்டனர். பலியான மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தி்ரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவர்கள் சாலை மறியல்

பஸ் டிரைவரின் கவனக் குறைவால் விபத்து ஏற்பட்டதாக கூறி அக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் நேற்று காலை தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் குறித்து தகவல் அறிந்தவுடன் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள், உயிர் இழந்த மாணவன் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்து மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டம் நடத்திய மாணவர்களுடன், கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இக்கல்லூரியின் தலைமை இடமான தஞ்சாவூர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Next Story