திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் - வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு


திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் - வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2020 10:30 PM GMT (Updated: 18 March 2020 12:13 AM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர், 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. தமிழக அரசும் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அறிவித்ததோடு கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பஸ், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்தபின்னரே நமது மாநிலத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் சின்னகந்திலி எல்லை பகுதியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னரே அந்த வாகனங்கள் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் வாகனங்களில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் பணியும் நடக்கிறது.

இந்த பணிகளை மாவட்ட வருவாய் அதிகாரி தங்கையாபாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் பரவாமல் முன்னெச்சரிக்கையாக அனைவரும் கைகளை அடிக்கடி கழுவும் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 1 அடி தொலைவில் நின்று பேச வேண்டும். யாருக்காவது இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்’’ என்றார். ஆய்வின்போது திருப்பத்தூர் தாசில்தார் அனந்த கிரு‌‌ஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.பிரபாவதி, குனிச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.தீபா, ஊராட்சி செயலாளர் சக்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

இதேபோல் ஆந்திர மாநில எல்லையான நாட்டறம்பள்ளி தாலுகா கொத்தூரில் உள்ள சோதனை சாவடியில் பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அந்தந்த ஊராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினியை ஸ்பிரே மூலம் தெளிக்கவும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து ஊராட்சி செயலாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சந்திரன் ஆகியோர் எடுத்துக் கூறினர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் கிரு‌‌ஷ்ணன் உள்பட ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story