கோவில்பட்டியில் பஸ்கள், ரெயில்களில் கிருமிநாசினி தெளிப்பு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்


கோவில்பட்டியில் பஸ்கள், ரெயில்களில் கிருமிநாசினி தெளிப்பு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 18 March 2020 10:30 PM GMT (Updated: 18 March 2020 11:57 AM GMT)

கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பஸ்கள், ரெயில்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பஸ்கள், ரெயில்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு 

சீன நாட்டில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 100–க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவாதவாறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் வருகிற 31–ந்தேதி வரையிலும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவில் அரசு விரைவு பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அங்கு பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சோப்பு மூலம் கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவ வேண்டும் என்று டிரைவர்கள், பயணிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

இந்த பணிகளை வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், நகரசபை சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். வருகிற 31–ந்தேதி வரையிலும் தினமும் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெறிச்சோடிய ரெயில் நிலையம் 

இதேபோன்று கோவில்பட்டி ரெயில் நிலையம் வழியாக சென்ற ரெயில்களில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ, கார், வேன் போன்றவற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் மற்றும் ஆட்டோ, கார், வேன் டிரைவர்களுக்கு சோப்பு மூலம் சுத்தமாக கை கழுவுவது குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

நகரசபை சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், குருநாத், டாக்டர் எழில், ரோட்டரி சங்க சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துசெல்வம், சங்க நிர்வாகிகள் முத்து முருகன், பிரபாகரன், தூய்மை பாரத இயக்க மேற்பார்வையாளர்கள் இளையராஜா, மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும்பாலானவர்கள் பஸ்கள், ரெயில்களில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்ததால் வெறிச்சோடியது.

பயணத்தை ரத்து செய்யும் பயணிகள் 

இதுகுறித்து ரெயில்வே முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் சேதுரத்தினம் கூறுகையில், கோவில்பட்டி வழியாக தினமும் 57 ரெயில்கள் செல்கின்றன. இங்கிருந்து தினமும் 1,200 முதல் 1,300 வரையிலான பயணிகள் ரெயில்களில் பயணித்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இங்கிருந்து தினமும் 500 முதல் 600 வரையிலான பயணிகளே ரெயில்களில் பயணம் செய்கின்றனர். கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் முன்பதிவு கட்டணமாக தினமும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வசூலானது. தற்போது தினமும் ரூ.5 ஆயிரம் வரையிலுமே முன்பதிவு கட்டணமாக வசூலாகிறது.

முன்பதிவற்ற கட்டணமாக தினமும் ரூ.2 லட்சம் வரையிலும் வசூலானது. தற்போது முன்பதிவற்ற கட்டணமாக தினமும் ரூ.1 லட்சமே வசூலாகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களும் தற்போது அதனை ரத்து செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

பூங்கா மூடப்பட்டது 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, கோவில்பட்டி நகரசபை ராமசாமிதாஸ் பூங்கா வருகிற 31–ந்தேதி வரையிலும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று அந்த பூங்காவுக்கு நடைப்பயிற்சிக்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் அரசு பஸ், தனியார் பஸ், மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு த.மா.கா. சார்பில் இலவச முக கவசம் வழங்கப்பட்டது. நகர தலைவர் ராஜகோபால், பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், வட்டார தலைவர் ஆழ்வார்சாமி, நகர துணை தலைவர்கள் வீரபுத்திரன், ராஜமாணிக்கம், நகர செயலாளர்கள் செண்பகராஜ், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story