வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் கை கழுவும் வசதி; கலெக்டர் தொடங்கி வைத்தார்


வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் கை கழுவும் வசதி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 March 2020 10:30 PM GMT (Updated: 18 March 2020 3:50 PM GMT)

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கை கழுவ வசதியாக தொட்டி அமைக்கப்பட்டது. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

வேலூர், 

வேலூரில் நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரி, டெம்போ, மினிலாரி போன்ற வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம், சில்லறை விலையில் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

வணிக வளாகங்கள், மளிகை கடைகளை விட காய்கறிகள், பழங்கள் குறைந்த விலையில் வி்ற்பனை செய்யப்படுவதால் நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் எந்த நேரமும் அதிகமாக காணப்படும். மேலும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், வணிகர்கள் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி கொண்டு சென்று விற்கிறார்கள்.

இந்த நிலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் கை கழுவி பாதுகாப்பாக இருக்க மார்க்கெட்டின் நுழைவுவாயில் அருகே தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டது.

இதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நேதாஜி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஞானவேல், மாவட்ட செயலாளர் ஏ.வி.எம்.குமார், வேலூர் தாசில்தார் சரவணமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு கை கழுவும் தொட்டியின் செயல்பாட்டை தொடங்கி வைத்து அனைவரும் கைகளை சுத்தமாக கழுவி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து கலெக்டர் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கைகழுவும் முறை குறித்து விளக்கி கூறினார்.

நிகழ்ச்சியில், பேரமைப்பு மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத், நகரசெயலாளர் பாபுஅசோகன், நிர்வாகி எல்.கே.எம்.பி.வாசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story