கொரோனா வைரஸ் பாதிப்பு: மண்டல துணைத்தாசில்தார் தலைமையில் சிறப்பு குழுக்கள் நியமனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கொரோனா வைரஸ் பாதிப்பு:  மண்டல துணைத்தாசில்தார் தலைமையில் சிறப்பு குழுக்கள் நியமனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 18 March 2020 10:15 PM GMT (Updated: 18 March 2020 3:59 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் யாரேனும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து கண்காணிப்பதற்காக மண்டல துணைத்தாசில்தார் தலைமையில் சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கொரோனா வைரஸ் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் யாரேனும் கண்டறியப்பட்டால், அவரது குடும்பம் குறித்த விவரங்கள், குறிப்பிட்ட கால அளவில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், உடன் பயணம் செய்தவர்கள் போன்ற முழு விவரங்களையும் சேகரிக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

சிறப்புக்குழுக்கள் 

ஒவ்வொரு யூனியன் வாரியாக, மண்டல துணை தாசில்தார்கள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில், ஊரகவளர்ச்சித்துறை அலுவலர், சுகாதாரத்துறை அலுவலர், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். யாருக்கேனும் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் கிடைத்தால், அந்த விவரங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் மணிகண்டனுக்கு தெரிவித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த சிறப்பு குழுவினர் அந்தந்த பஞ்சாயத்து ஒன்றிய பகுதிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story