பிளஸ்-2 மாணவி தற்கொலை இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் விபரீத முடிவு


பிளஸ்-2 மாணவி தற்கொலை இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 19 March 2020 12:30 AM GMT (Updated: 18 March 2020 7:19 PM GMT)

குழித்துறை அருகே இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் தங்க மாயன், முறுக்கு வியாபாரி. இவருடைய மனைவி சுகப்ரியா. இவர்களுக்கு பிரதீ‌ஷா (வயது 18), தீபிகா (17) என்ற 2 மகள்களும், சர்வே‌‌ஷ் பாண்டி (10) என்ற மகனும் இருந்தனர். மாயனின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி.

திரித்துவபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தீபிகா பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பிளஸ்-2 பொதுத் தேர்வு நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இயற்பியல் தேர்வு நடந்தது. இந்த தேர்விற்கான வினாக்கள் கடினமாக இருந்ததால் தீபிகா அந்த தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர் வேதனையுடன் இருந்தார்.

தூக்கில் தொங்கினார்

இதற்கிடையே நேற்றுமுன்தினம் மாயன் தன்னுடைய மனைவி சுகப்ரியாவுடன் தனது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு சென்றார். அன்றைய தினம் இரவு 11 மணிக்கு தீபிகா, அக்காள் பிரதீ‌ஷாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததாகவும், அந்த தேர்வை சரியாக எழுதவில்லை எனவும் கூறி அழுதுள்ளார். உடனே அவர் தீபிகாவுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் தீபிகா தூங்கப்போவதாக அறைக்கு சென்றுள்ளார். நள்ளிரவில் திடீரென அந்த அறையில் இருந்து சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு கண் விழித்த பிரதீ‌ஷா அந்த அறைக்கு ஓடி சென்றார். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் தீபிகா கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

சோகம்

தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீபிகாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், தீபிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் விரைந்து சென்று தீபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயற்பியல் தேர்வு கடினமாக இருந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story