‘கொரோனா’ முன் எச்சரிக்கை: கும்பகோணத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகள் தீவிரம்


‘கொரோனா’ முன் எச்சரிக்கை: கும்பகோணத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 18 March 2020 11:00 PM GMT (Updated: 18 March 2020 7:23 PM GMT)

‘கொரோனா’ முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக கும்பகோணத்தில் சுகாதார மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கும்பகோணம்,

உலகையே அச்சுறுத்தி வரும் ‘கொரோனா’ வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் நகராட்சி ஆணையர் லட்சுமி தலைமையில் நகர்நல அலுவலர் பிரேமா முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் சுகாதார மேம்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

பொது கழிவறை

பஸ் நிலையம், ரெயில்நிலையம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, மீன்மார்க்கெட், தாராசுரம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொது கழிவறைகள் தூய்மையாக உள்ளதா? என கண்காணிக்க நகராட்சி பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கும்பகோணம் மீன்மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வருவதால், மீன் மார்க்கெட்டை மூடுவதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பகோணம் நகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார மேம்பாட்டு பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிவண்ணன், கும்பகோணம் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

கிருமி நாசினி

கும்பகோணம் வரும் அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் நேற்று நகராட்சி ஆணையர் தலைமையிலான பணியாளர்கள் பயணிகளுக்கு கிருமி நாசினி வழங்கி, கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தினர்.

Next Story