2 வாலிபர்களுக்கு கொரோனா அறிகுறி: அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி


2 வாலிபர்களுக்கு கொரோனா அறிகுறி: அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 18 March 2020 9:15 PM GMT (Updated: 18 March 2020 9:08 PM GMT)

துபாயில் இருந்து மதுரை வந்த வாலிபருக்கும் ஒடிசா மாநிலத்தில் இருந்து சாத்தூர் வந்த வாலிபருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை, 

துபாயில் இருந்து நேற்று மாலை மதுரைக்கு ஒரு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரையை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபரை சோதனைசெய்த போது அவருக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபர் பாதுகாப்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் கொரோனா தொடர்பான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து டீன் சங்குமணி கூறுகையில், விமான நிலையத்தில் இருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல், மதுரை டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், சபரிமலையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக இங்கு அழைத்து வந்தார்கள். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தற்போது வரை கொரோனா வார்டில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், செவிலியர்கள் கொண்ட தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள் என்றார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியிலுள்ள சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலைக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்து 19 வயது வாலிபர் நேற்றுமுன்தினம் வேலைக்கு வந்துள்ளார். அவருக்கு இரவு முழுவதும் அதிக காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் இருந்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்த பணியாளர்கள் நேற்று ஏழாயிரம்பண்ணை ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவில்பட்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் தென்பட்ட காரணத்தினால் அதுகுறித்து ஆய்வு மற்றும் மேல் சிகிச்சைக்காகஅவர்ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Next Story