கோவையில் கேரள லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் வாலிபர் கைது


கோவையில் கேரள லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 March 2020 11:45 PM GMT (Updated: 18 March 2020 9:18 PM GMT)

கோவையில் வாலிபரிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை,

தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து கோவை மாவட்டத்தில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். ஆன்லைன் மூலம் லாட்டரி முடிவுகளை அறிந்து கொள்கிறார்கள்.

இதுதவிர கேரள மாநில லாட்டரி சீட்டுகளின் முடிவுகளின் அடிப்படையில் கடைசி 3 எண்களுக்கு பரிசு என்ற பெயரில் கோவை மாவட்டத்தில் சூதாட்டமும் நடைபெறுகிறது.

கத்தை, கத்தையாக பறிமுதல்

கோவை ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம் சோதனைச்சாவடி அருகே போலீசார் இரவில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் தடைசெய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகள் கத்தை, கத்தையாக இருந்தன. மொத்தம் 2,900 லாட்டரி சீட்டுகள் அந்த வாலிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் விசாரணையில் லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்தவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டணம், முத்துநகரை சேர்ந்த பிரபு (வயது38) என்று தெரியவந்தது.

கைது

கேரள மாநிலத்தில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து,கோவையில் பல இடங்களில் திருட்டுத்தனமாக விற்பனைக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்தது. சிங்காநல்லூர் போலீசார் பிரபுவை கைது செய்து, லாட்டரி சீட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story