அவினாசி அருகே பயங்கரம்: லாரி மீது கார் மோதியது என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலி 2 பேர் படுகாயம்


அவினாசி அருகே பயங்கரம்: லாரி மீது கார் மோதியது என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 March 2020 12:00 AM GMT (Updated: 19 March 2020 5:14 PM GMT)

அவினாசி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் சேலத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசும் பள்ளி, கல்லூரிகளை வருகிற 31-ந்தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும்படி அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தமிழக அரசு உத்தரவால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் பெரிய சீரகப்பாடியில் உள்ள விநாயகா மி‌‌ஷன்ஸ் கிருபானந்தவாரியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் அந்த கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் சிலர் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு எடுத்தனர்.

லாரி மீது கார் மோதல்

அதன்படி அந்த கல்லூரியில் பி.டெக் பயோ மெடிக்கல் பிரிவு 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் ஆலத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜே‌‌ஷ்குமார்(வயது 20), விழுப்புரம் சங்கராபுரம் எடுதானூரை சேர்ந்த கிரு‌‌ஷ்ணமூர்த்தி மகன் வெங்கடாசலம்(20), கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம், அம்மன் நகரை சேர்ந்த முருகன் மகன் ஜெயசூர்யா(19), சேலம் மாவட்டம் சின்ன சீரகப்பாடியை சேர்ந்த வாசுதேவன் மகன் இளவரசன்(20), தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், ஜக்கம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் சந்தோ‌‌ஷ்(20), விழுப்புரத்தை சேர்ந்த பொன்முடி மகன் வசந்தகுமார்(22), சேலம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்(20) ஆகிய 7 பேரும் ஒரு வாடகை காரில் பெரியசீரகப்பாடியில் இருந்து ஊட்டிக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டனர். அந்த காரை பவானியை சேர்ந்த தேவராஜ் மகன் மணிகண்டன்(42) என்பவர் ஓட்டினார். அந்த கார் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது.

அதிகாலை 5.40 மணியளவில் அந்த கார் அவினாசி அருகே பழங்கரை நல்லிகவுண்டம்பாளையம் பிரிவு பக்கம் வந்தது. அப்போது முன்னால் சென்ற சிமெண்டு பாரம் ஏற்றிய லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது.

6 பேர் உடல் நசுங்கி பலி

இந்த விபத்தில் கார் டிரைவர் மணிகண்டன், என்ஜினீயரிங் மாணவர்கள் ராஜே‌‌ஷ்குமார், இளவரசன், வெங்கடாசலம், வசந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். சந்தோ‌‌ஷ், ஜெயசூர்யா, கார்த்திக் ஆகிய 3 பேரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர். விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அவினாசி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த சந்தோ‌‌ஷ், ஜெயசூர்யா ஆகிய இருவரையும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கார்த்திக் மற்றொரு ஆம்புலன்சில் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயசூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதற்கிடையே விபத்தில் பலியான 5 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விபத்தில் பலியான மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காலை வந்திருந்தனர். அங்கு இறந்து கிடந்த மாணவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். சுற்றுலா வந்த இடத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story