சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 9-ஆனது


சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு பலி எண்ணிக்கை 9-ஆனது
x
தினத்தந்தி 22 March 2020 12:00 AM GMT (Updated: 21 March 2020 8:16 PM GMT)

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தது.

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறையில் நேற்று முன்தினம் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சம்பவ இடத்தில் 7 பெண்களும், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி முருகையா என்பவரும் உயிரிழந்தனர். இந்தநிலையில் ஏழாயிரம் பண்ணை அருகே முக்கூட்டுமலையை சேர்ந்த குருசாமி என்பவரை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் ஏழாயிரம் பண்ணை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று தாசில்தார் விஜயராஜ் முன்னிலையில் அதிகாரிகள் வந்தனர். விபத்து நடந்த இடத்தில் இடிபாடுகளில் தேடும் பணி மீண்டும் நடந்தது. அங்கு குருசாமி உடல் கிடந்தது. இதனால் இந்த சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தது.

பின்னர் அவரது உடல் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. இதற்கிடையே உரிய நிவாரணம் வழங்கக்கோரி, விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடு்பட்டனர். அவர்களிடம் ஆர்.டி.ஓ. காளிமுத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமரசம் ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2 பேர் கைது

இதே ேபால் ஏழாயிரம் பண்ணை போலீஸ்நிலையம் முன்பும் கிராம மக்கள் போராட்டம் நடத்தி னர். விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் கணேசன், குத்தகைதாரர்கள் கரூர் பாலகிருஷ்ணன், சிவகாசி குட்டி, ஜக்கம்மாள்புரம் மகேசுவரன், மார்க்கநாதபுரம் மதியழகன் உள்ளிட்ட 6 பேர் மீது ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்டி, மகேசுவரனை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்தில் சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

Next Story