வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 1,000 பேரை வீடுகளில் 14 நாள் தனிமைப்படுத்த கைகளில் முத்திரை


வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த 1,000 பேரை வீடுகளில் 14 நாள் தனிமைப்படுத்த கைகளில் முத்திரை
x
தினத்தந்தி 22 March 2020 10:45 PM GMT (Updated: 22 March 2020 10:03 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு 10 விமானங்களில் வந்த 1,000 பேர், தங்களை 14 நாள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள கைகளில் முத்திரையிடப்பட்டனர். மேலும் முதியோர்கள் 73 பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆலந்தூர், 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளை விமான நிலைய மருத்துவ குழுவினர் நவீன கருவிகள் மூலம் தீவிரமாக பரிசோதனை செய்த பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தநிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அபுதாபி, சிங்கப்பூர், லண்டன், மலேசியா, தாய்லாந்து, சார்ஜா, கொழும்பு மற்றும் துபாயில் இருந்து 10 விமானங்கள் வந்தன. அதில் வந்த பயணிகளை விமான நிலையத்தில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவர்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு, அடுத்த 14 நாட்கள் அவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அறுவுறுத்தப்பட்டு, அவர்களின் கையில் முத்திரையிடப்பட்டது. இவர்கள் வீடியோ கால் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த 10 விமானங்களில் பயணம் செய்த 65 வயதுக்கு மேற்பட்ட 73 முதியோர்களை விமான நிலைய மருத்துவ குழுவினர் மேல் சிகிச்சைக்காக தாம்பரம் சானடோரியம் அரசு சிறப்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story