அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 23 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு


அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 23 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு
x
தினத்தந்தி 22 March 2020 11:00 PM GMT (Updated: 22 March 2020 10:57 PM GMT)

அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக 23 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

அருப்புக்கோட்டை,

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். வணிக வளாகங்கள், கடைகள், மார்க்கெட், தொழில் நிறுவனங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதி என அனைத்தும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி காட்சி அளித்தது.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 23 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு, அதில் நோயாளிகளுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதை தலைமை மருத்துவர் வெங்கடேசன், மருத்துவர் சந்திர மவுலி ஆகியோர் ஆய்வு செய்து காய்ச்சலால் வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தால் மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

மக்கள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மருத்துவமனைக்கு வெளி நோயாளிகள் வராததால் மருத்துவமனை வெறிச்சோடி கிடந்தது. பிரதமரின் ஆலோசனையில் பேரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டவுன் போலீஸ் நிலையம் முன்பு போலீசார், வருவாய்த்துறையினர், மருத்துவமனை அலுவலர்கள் கலந்து கொண்டு கைதட்டினர். இதில் ஆர்.டி.ஓ. செல்லப்பா, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் தலைமை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story