வனவிலங்கு வாரிய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார், சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. - முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கடிதம் கொடுத்தார்


வனவிலங்கு வாரிய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார், சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. - முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கடிதம் கொடுத்தார்
x
தினத்தந்தி 22 March 2020 11:35 PM GMT (Updated: 22 March 2020 11:35 PM GMT)

உப்பள்ளி-அங்கோலா ரெயில் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வனவிலங்கு வாரிய உறுப்பினர் பதவியை சவுமியா ரெட்டி எம்.எல்.ஏ. ராஜினாமா செய்து முதல்- மந்திரி எடியூரப்பாவிடம் கடிதம் கொடுத்தார்.

பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து கடலோரத்தில் அமைந்து உள்ள கார்வார் மாவட்டம் அங்கோலா வரை ரெயில் பாதை அமைத்து அந்த வழியாக ரெயில்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் இந்த ரெயில் பாதை வனப்பகுதி வழியாக அமையும் என்பதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் என்றும், வனப்பகுதி அழிக்கப்படும் எனவும் கூறி வனவிலங்கு, இயற்கை ஆர்வலர்கள் இந்த ரெயில் திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தி வந்தனர். அதனால் இந்த ரெயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் உப்பள்ளி-அங்கோலா இடையே வனப்பகுதி வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு வனவிலங்கு, இயற்கை ஆர்வலர்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.

இந்த நிலையில் மாநில அரசின் இந்த முடிவுக்கு வனவிலங்கு வாரிய உறுப்பினரும், பெங்களூரு ஜெயநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சவுமியா ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும் தனது வனவிலங்கு வாரிய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அவர் முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கடிதமும் கொடுத்து உள்ளார்.

Next Story