குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை போட அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்


குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து: பெட்டியில் மனுக்களை போட அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 23 March 2020 11:00 PM GMT (Updated: 23 March 2020 7:46 PM GMT)

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டும், பெட்டியில் கூட மனுக்களை போட அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலான அனைத்து நிகழ்ச்சிகளும் வருகிற 31-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே கலெக்டர் சாந்தா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும் அடங்கும். கூட்டம் தான் நடைபெறாது மனுக்களை போட்டு செல்ல பெட்டி வைக்கப்பட்டிருக்கும் என்றும், சிலர் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடைபெறும் என்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் மனுக்களோடு நேற்று காலை முதல் வந்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் பெட்டியில் கூட மனுக்களை போடக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.

பொதுமக்கள் ஏமாற்றம்

இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வருகிற 31-ந் தேதி பிறகு அல்லது அரசின் மறு உத்தரவு வந்த பிறகு மனு அளிக்க வாருங்கள் என்று கூறி, அவர்களை திரும்பி வீட்டிற்கு போகுமாறு அறிவுறுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை அரசு இ-சேவை மையமும் மூடப்படுவதால், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்திற்கு வந்த பொதுமக்களையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதேபோல் கொரோன வைரஸ் அச்சுறுத்தலால் தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்களும் நேற்று முதல் பணிக்கு செல்லவில்லை. பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாததால் கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. 

Next Story