கொரோனா எதிரொலி களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு


கொரோனா எதிரொலி களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 11:30 PM GMT (Updated: 23 March 2020 9:14 PM GMT)

கேரளாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது.

களியக்காவிளை,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 31-ந் தேதி வரையிலும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

பக்கத்து மாநிலமான கேரளாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் எல்லைகள் மூடப்பட்டன. குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

3 அடுக்கு சோதனை

களியக்காவிளை மைய பகுதியில் உள்ள கோழிவிளை சோதனைச்சாவடி, மார்க்கெட் சாலை சோதனைச்சாவடி, தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடிகள் மூடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை சோதனைச்சாவடி வழியாக ஆம்புலன்ஸ், பால் ஏற்றி செல்லும் வாகனம் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதே சமயத்தில் ஏற்கனவே கேரளாவிற்கு சென்று விட்டு தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது.

மேலும் அங்கு 3 அடுக்கு சோதனை நடந்து வருகிறது. அதாவது, களியக்காவிளை எல்லை சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல், சளி இருக்கிறதா? என வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்த பின்பு, அதன் அருகே போக்குவரத்து சோதனைச்சாவடி அருகே மீண்டும் சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து படந்தாலுமூடு சோதனைச்சாவடி அருகே கால்நடைத்துறையினர் வாகனங்களில் கிருமிநாசினியை தெளித்தனர். இவ்வாறு 3 அடுக்கு சோதனைக்கு பிறகு தான் அத்தியாவசிய வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. மேலும் கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காணமுடிந்தது.

Next Story