கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுரை


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 9:21 PM GMT)

சின்னாளப்பட்டி, அம்மையநாயக்கனூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட கலெக்டர் விஜயலட்சுமி, பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து துறை அலுவலர்கள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளை கலெக்டர் விஜயலட்சுமி அவ்வப்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, அம்மையநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட தனிப்பிரிவு குறித்தும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளை...

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தை பேண வேண்டும். வீட்டுக்குள் நுழையும் போது கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை முடிந்தவரை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டாம். மற்ற குழந்தைகளோடு குழுவாக சேர்ந்து விளையாடினால் வீட்டுக்கு வந்ததும் அவர்களின் கைகளை சுத்தமாக கழுவி விட வேண்டும்.

தேவையில்லாமல் பொது இடத்தில் கூட்டமாக நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பொதுமக்களில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, நலப்பணிகள் இணை இயக்குனர் பூங்கோதை, துணை இயக்குனர் (சுகாதாரம்) நளினி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story