காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 March 2020 10:15 PM GMT (Updated: 23 March 2020 9:26 PM GMT)

காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் உள்ள ராஜாஜி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்கும் பொதுமக்களை முகப்பு வாயிலில் ஒருவர் நின்று கொண்டு, கிருமிநாசினி கையில் தெளித்த பிறகு, உள்ளே அனுமதித்தார். மாவட்ட கலெக்டர் பொன்னையா, சப்-கலெக்டர் சரவணன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, நகராட்சி என்ஜினீயர் மகேந்திரன், நகர் நல அலுவலர் டாக்டர் முத்து, உள்பட சுகாதாரத்துறையினருடன் மார்க்கெட் உள்ளே சென்றார்.

மார்க்கெட் முகப்பு வாயில் சென்றதும், அங்குள்ள வியாபாரிகளிடம் பொதுமக்கள் செல்ல இடைவெளி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி கொரோனா தொடர்பான துண்டு பிரசுரங்களை மார்க்கெட் வியாபாரிகளிடம் கலெக்டர் வழங்கினார். மேலும் ராஜாஜி மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியூர்களிலிருந்து காஞ்சீபுரம் பஸ் நிலையத்திற்கு உள்ளே வரும் அனைத்து பஸ்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் பஸ்நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு வரும் பயணிகளும் சோப்பு போட்டு கைகளை கழுவிவிட்டு செல்கின்றனர். நேற்று காலை முதல் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கின.

மேலும் காஞ்சீபுரம் பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு கைகழுவும் முறைப்பற்றி விளக்கம் அளித்து, நகராட்சி ஆணையர் அறிவுரை வழங்கினார்.

கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் வருவாயத்துறையினரும், போலீசாரும், பெரிய ஜவுளி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளை மூடுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். அதையொட்டி, பெரிய சூப்பர் மார்க்கெட், ஜவுளிகடைகள் உடனடியாக மூடிவிட்டனர்.

Next Story