பெங்களூருவில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை


பெங்களூருவில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 March 2020 11:24 PM GMT (Updated: 23 March 2020 11:24 PM GMT)

பெங்களூருவில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு, 

கன்னட திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்தவர் ேமாகன் வாக்வாடி என்கிற கபாலி மோகன். தொழில் அதிபரான இவர் நிதி நிறுவனமும் நடத்தி வந்தார். மோகன் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியவர்களிடம் கந்துவட்டி வசூலித்ததாகவும் கூறி பெங்களூரு சதாசிவநகரில் உள்ள மோகனின் பங்களா வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பீனியா பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் மோகன் அறை எடுத்து தங்கி இருந்தார். ஆனால் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் அவர் தங்கியிருந்த அறையின் கதவை ஓட்டல் ஊழியர்கள் தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து ஜன்னல் வழியாக ஓட்டல் ஊழியர்கள் அறைக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது மோகன் தூக்கில் தொங்கினார். இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் கங்கமனகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் மோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. ஆனால் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். 

இதுகுறித்து கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னட திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story