கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரக்கூடாது - கலெக்டர் திவ்யதர்‌ஷினி எச்சரிக்கை


கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரக்கூடாது - கலெக்டர் திவ்யதர்‌ஷினி எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 March 2020 10:45 PM GMT (Updated: 24 March 2020 5:05 PM GMT)

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரக்கூடாது என்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்‌ஷினி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராணிப்பேட்டை, 

வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, அவர்களின் கையில் முத்திரையிடப்பட்டு இருக்கும்.

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் வரக்கூடாது. இதன் மூலம் பிறருக்கு இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். இந்த முத்திரை கொண்ட பொதுமக்கள் எவரேனும் அரசின் உத்தரவை மதிக்காமல் வெளியில் பொதுமக்களிடையே நடமாடுவது தெரியவந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு 04172-273188, 273166 என்ற 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்கள் மீது பொது சுகாதார திட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கடந்த ஒருமாத காலத்தில் எவரேனும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாக இருப்பின் அவர்களாகவே முன் வந்தோ அல்லது அவர்களுக்கு அருகாமையில் உள்ளவர்களோ மேற்கூறிய எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள இது உதவிகரமாக இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க வழி ஏற்படும்.

இத்தகைய நடவடிக்கைகள் யாவுமே இந்த வைரஸ் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்கும் காரணத்திற்காக அரசால் அறிவுறுத்தப்படுகிறது என்பதை மனதில் கொண்டு கொரோனா வைரஸ் அதிக அளவில் தொற்று ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story