கொரோனா வைரசை தடுக்க தீவிர நடவடிக்கை: தேவையின்றி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடியூரப்பா எச்சரிக்கை


கொரோனா வைரசை தடுக்க தீவிர நடவடிக்கை: தேவையின்றி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடியூரப்பா எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 24 March 2020 6:07 PM GMT)

கொரோனா வைரசை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெங்களூரு, 

கொரோனா வைரசை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தேவையின்றி யாரும் வெளியே நடமாடினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

எடியூரப்பா எச்சரிக்கை

சீனாவில் தாக்குதலை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கர்நாடகத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மேலும் நேற்று வரை 40 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையொட்டி கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, குடகு உள்ளிட்ட 9 மாவட்டங்கள் சீல் வைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஊரடங்கை பொதுமக்கள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மீறி தேவையின்றி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரத்த மாதிரி பரிசோதனை

“கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு வகையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதற்காக பெங்களூரு பாலபுரி விருந்தினர் மாளிகையை, போர் அலுவலகமாக மாற்றியுள்ளோம். கொரோனா தொடர்பான அனைத்து விதமான ஆலோசனைகள், கூட்டங்கள் இங்கு நடைபெறும். நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் இத்தகைய அலுவலகத்தை தொடங்கியுள்ளோம்.

கர்நாடகத்தில் உள்ள விமான நிலையங்களில் இதுவரை 1.27 லட்சம் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 12 ஆயிரம் பேரை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளோம். 1,157 பேரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 1,117 பேருக்கு அந்த வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதியாகியுள்ளது. அந்த வைரசுக்கு இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் நடவடிக்கை

மந்திரிகளை உள்ளடக்கி செயல்படையை அமைத்துள்ளோம். இந்த வைரஸ் மேலும் பரவக்கூடாது என்ற நோக்கத்தில் ஊரடங்கு மாதிரியான நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளோம். ஆயினும் பொதுமக்கள் வெளியில் வந்து நடமாடுகிறார்கள். அதனால், இனி கட்டுப்பாடுகளை மீறி வெளியில் நடமாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்களின் உயிரை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாளை (இன்று) யுகாதி பண்டிகையை மக்கள் எளிமையாக கொண்டாட வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

அனுமதி இல்லை

வருகிற 31-ந் தேதி வரை பெங்களூருவுக்குள் யாரையும் அனுமதிக்க மாட்டோம். அதுபோல் பெங்களூருவில் இருந்து யாரும் வெளியேறவும் அனுமதி இல்லை.

மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். மந்திரிகள் சுதாகர் மற்றும் ஸ்ரீராமுலுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இந்த பணியை ஒருவரது தலைமையில் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கொரோனாவை நிர்வகிக்கும் பொறுப்பு சுதாகருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story