144 தடை உத்தரவை மீறினால் வழக்கு மாவட்ட எல்லைகள் மூடல்


144 தடை உத்தரவை மீறினால் வழக்கு மாவட்ட எல்லைகள் மூடல்
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 6:18 PM GMT)

144 தடை உத்தரவை மீறினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் கை கழுவும் முறை, முக கவசம் அணிதல் குறித்து செயல்முறை விளக்கம் மற்றும் துண்டுப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று (புதன்கிழமை) முதல் காவல்துறையினர் தங்களது வாகனத்தை பயன்படுத்தி ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். காவல்துறையினரை பாதுகாக்கும் வகையில், அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தலா 2 முக கவசம், சோப்பு, கிருமிநாசினி வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியே வராமல் தடுக்கும் வகையில், ஊர்க்காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது வழக்குப்பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் இந்த தடை அமலில் இருக்கும்.

சிறையில் அடைக்கப்படுவார்கள்

தமிழக அரசு உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட எல்லைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வரவேண்டும். அத்தியாவசிய பொருள்களை ஏற்றி செல்ல சரக்கு வாகனத்துக்கு அனுமதி வழங்கப்படும். திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களை திறக்கக் கூடாது. பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் எக்காரணத்துக்காகவும் கூடுவது தடை செய்யப்படுகிறது. மீறினால், அவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், ஊரடங்கு உத்தரவை மீறி வணிக நிறுவனங்களை திறந்து விற்பனை செய்தால் அவர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான கடைகள் திறக்க கூடாது. திருட்டுத் தனமாக மது விற்போர் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.

வாரச்சந்தை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று காலை வியாபாரிகள் லாரிகளில் காய்கறி மூட்டைகளை சரக்கு வாகனங்களில் எடுத்து வந்து சந்தையில் வியாபாரம் செய்ய முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் வாரச்சந்தை போடக்கூடாது என அறிவுறுத்தினர்.

மக்கள் கூட்டம்

மேலும் நேற்று மாலை 144 தடை உத்தரவு பிறப்பித்ததால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக காய்கறிகள், மளிகை பொருட்கள் அன்றாடம் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மருத்துவ குழுவினர் டாக்டர்கள் சந்திரசேகர், ஸ்ரீராம் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வகாந்தி, பிரவீன் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் ஜெயங்கொண்டம் பஸ் பயணிகளை ஒவ்வொருவராக அழைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் நேற்று மாலை 6 மணி முதல் 31-ந் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததையொட்டி பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் 5 பேர் மற்றும் கூட்டமாகவோ செல்லக்கூடாது என்றும், குழந்தைகள் பக்கத்து வீட்டிற்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

எல்லைகள் மூடல்

அரியலூர் நகரில் காலை முதல் மளிகை, காய்கறி, ஜவுளி, நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வியாபாரிகள் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்தனர். அரியலூர் மாவட்ட எல்லையான காடுவெட்டி, மேலணிக்குழி குடிகாடு, ராமதேவ் நல்லூர் மற்றும் அணைக்கரை கொள்ளிடம் கீழணை ஆகிய 4 பகுதிகளும் மூடப்பட்டது. காடுவெட்டி,மேலணிக்குழி குடிகாடு மற்றும் ராம்தேவ் நல்லூர் ஆகிய மூன்று பகுதிகள் கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள பகுதிகள், அணைக்கரை கொள்ளிடம் கீழணை மட்டும் தஞ்சை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அரியலூர் மாவட்ட எல்லைகளான ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் சாலை ஆத்து குறிச்சி கிராமம், ஆண்டிமடம்- ஸ்ரீீமுஷ்ணம் சாலையில் தஞ்சாவூரான் சாவடி கிராமம் கடலூர் மாவட்டத்தை இணைக்கும் மாவட்ட எல்லைப்பகுதிகளில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மற்றும் தா.பழூர் ரோடு பஸ் நிறுத்தம், விருத்தாசலம் ரோடு பஸ் நிறுத்தம், சிதம்பரம் ரோடு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பயணிகள் நின்று தங்கள் ஊருக்கு செல்ல காத்திருந்தனர். இதில் அவ்வழியே சென்ற சில சரக்கு ஆட்டோக்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் ஏறி தங்கள் ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஜெயங்கொண்டம் பகுதியில் முக கவசங்கள் அதிக விற்பனைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்து நகர பகுதியில் உள்ள கடைககள் சென்று சோதனையிட்டனர். மேலும் கடைகளில் முக கவசங்கள் ஏதும் கிடைக்காததால் கடைக்காரர்களிடம் முக கவசம் அதிக விலைக்கு விற்கக்கூடாது என எச்சரித்தும், மீறி அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துச் சென்றனர். மேலும் ஜெயங்கொண்டம் 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அத்தியாவசியப் பொருட்களான மளிகை கடைகள், மருந்துக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story