திருச்சி காந்திமார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி


திருச்சி காந்திமார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி
x
தினத்தந்தி 24 March 2020 11:00 PM GMT (Updated: 24 March 2020 7:08 PM GMT)

திருச்சி காந்திமார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. காய்கறிகள் விலை இன்று குறைய வாய்ப்பு உள்ளது.

திருச்சி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் வருகிற 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தின் காரணமாக திருச்சி காந்திமார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தார்கள்.

திருச்சி நகரின் பல இடங்களில் காய்கறி விற்பனை செய்யும் மார்க்கெட்டுகள் இருந்தாலும் மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் அதிக அளவில் இருப்பது திருச்சி காந்திமார்க்கெட்டில் தான். இங்குள்ள கடைகள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியவையாகும். இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்தனர். இதனால் காந்திமார்க்கெட் பகுதியில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இன்று விலை குறையும்

காந்திமார்க்கெட்டில் நேற்று சில காய்கறிகளின் விலை மட்டும் சற்று உயர்வாக இருந்தது. இது தொடர்பாக காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் கூறுகையில் ‘காந்திமார்க்கெட் வழக்கம் போல் செயல்படும். வெளிஇடங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வருவதற்கும் தடை இல்லை. எனவே காய்கறிகள் கிடைக்காமல் போய்விடுமோ என்று பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை.

இன்று முதல் காய்கறிகள் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசு பிறப்பித்து உள்ள உத்தரவின் அடிப்படையில் காய்கறி வாங்குவதற்கு ஒட்டுமொத்த குடும்பமே வராமல் வீட்டுக்கு ஒருவர் வந்தால், தேவை இல்லாத நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமலும் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்’ என்றார்.

Next Story