பட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை 6 பேருக்கு வலைவீச்சு


பட்டுக்கோட்டையில், முன்விரோதத்தில் மினிலாரி டிரைவர் கட்டையால் அடித்துக்கொலை 6 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 7:13 PM GMT)

பட்டுக்கோட்டையில் முன்விரோதத்தில், மினி லாரி டிரைவரை கட்டையால் அடித்து கொன்ற 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்ஜாபர். இவருடைய மகன் துரை என்கிற சதக்கத்துல்லா (வயது 25). மினிலாரி டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சதக்கத்துல்லாவுக்கும், முகமது அலிக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் முகமது அலியின் மோட்டார் சைக்கிளை சதக்கத்துல்லா சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.

கட்டையால் அடித்துக்கொலை

இதை தொடர்ந்து முகமது அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சதக்கத்துல்லாவை தேடி சென்றனர். நேரு நகர் பச்சையம்மன் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த சதக்கத்துல்லாவை, முகமது அலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழிமறித்து உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சதக்கத்துல்லா துடி துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதக்கத்துல்லாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

6 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அலி, அக்கு, சாகுல் ஹமீது, அயூப்கான் உள்பட 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story